பெரியோரைத் துணைக் கோடல்

யார் பெரியவர்?

தன்னலம் கருதாது தமதுயிர் மதியாது
நன்னிலம் காக்கவும் தம்குலம் ஓங்கவும்
இன்னுயிர் ஈந்தேனும் செய்காரியம் முடிப்பவர்

கிழவனாகி தோல்சுருங்கி மண்டை மயிருதிர்ந்து
வழவழவனாகி கண்ணிடுங்கிப் போனாலும்
உழவனாகவே உயிர்த்திருந்து உலகப்பசி தீர்ப்பவர்

மாசாயிருக்கும் மனதையும் அறிவையும்
கூசாமலே சீர்படுத்தி ஞானம் தரும்
ஆசானாய் வழிகாட்டி வளப்படுத்தி நெறிப்படுத்துபவர்

கடமைக்குப் பெற்று கஞ்சி ஊத்தாமல்
உடைமைகளை விற்றாவது தம்மக்களை
திடமாகச் சபைமுன்னர் சிறந்தோங்க வைத்து
வடமாகத் தேருக்கென உவமானமாய் நிற்கும்
தந்தை எனப்படுபவர்

சேயெனும் பிண்டத்தை உயிர்கொடுத்து வெளிதள்ளி
வாயார சீராட்டி உதிரம் பிரித்து பாலூட்டி
நோயணுகா பத்தியத்தால் பிள்ளைக்கு உரமூட்டி 
தீயாய் வளர்க்வென வீரத்தை சேர்த்தூட்டும் 
தாயார் எனப்படுபவர் 

இப்பெரியோர் துணை யிருப்பின் தயையிருப்பின் 
அளப்பரிய செயல்களும் சாதனையும் கைகூடும் 
நகைப்பதற்கு எள்ளளவும் இடங்கொடுக்கா இவர்துணைவு 
சிறப்புடைய சீரும் பேரும் நமக்கெனவே உருவாகும் 

துணைக்கோடல் என்பது அருகிருத்தல் மட்டுமல்ல 
தினையளவும் பிசகாது அவர் அறிவுசால் நடப்பது 
வினையெச்சம் உயர்வதுபோல் அவர்பெயர் பேணுவது 
உனையுயர்த்தும் பெரியோரை உளமார பணிவது 

Comments